ADDED : பிப் 14, 2024 01:19 AM
சென்னை:சட்டசபையில் நேற்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உட்பட, 11 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டசபை நேற்று கூடியதும், முன்னாள் அமைச்சர்கள் வடிவேல், துரை ராமசாமி; முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தெய்வநாயகம், தங்கவேல், கு.க.செல்வம், ராஜசேகரன் ஆகியோரின் மறைவுக்கு, சபாநாயகர் இரங்கல் குறிப்புகள் வாசித்ததும், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், சங்கர நேத்ராலயா நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான பத்ரிநாத், முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலரும், ஒடிசா மாநில முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன், தே.மு.தி.க., தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு, சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்ததும், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

