துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்பு; மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நால்வர் சேர்ப்பு; 3 பேர் நீக்கம்
துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்பு; மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நால்வர் சேர்ப்பு; 3 பேர் நீக்கம்
ADDED : செப் 29, 2024 06:27 AM

சென்னை : தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றியமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜி, நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மூன்று அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு, இரு புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டு உள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, இன்று மதியம் 3:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரவி இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, கூடுதலாக உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் நாசர், அரசு கொறடாவாக உள்ள திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., கோவி செழியன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய அமைச்சர்களுக்கான துறைகள், இன்று காலை அறிவிக்கப்படும். அதேநேரம் முதல்வர் பரிந்துரையின்படி, சில அமைச்சர்கள் வசமிருந்த துறைகள் மாற்றப்பட்டுள்ளன.