கிரிவலப் பாதையில் உதயநிதி மகிழ்ச்சி அளிக்கிறது: தமிழிசை
கிரிவலப் பாதையில் உதயநிதி மகிழ்ச்சி அளிக்கிறது: தமிழிசை
ADDED : அக் 19, 2024 07:25 PM
கோவை:''மொழி அரசியலில் இருந்து, தி.மு.க.,வினர் வெளியே வர வேண்டும்,'' என்று பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில், நாங்கள் மட்டும்தான் தமிழ்ப்பற்றாளர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க, தி.மு.க.,வினர் முயற்சிக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியது.
பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை உட்பட, தமிழை மாநிலம் தாண்டி, தேசம் தாண்டி கொண்டு சென்றுகொண்டிருக்கிறார் பிரதமர்.
ஹிந்தி வாரம் கொண்டாடப்பட்டதை, ஏன் எதிர்க்க வேண்டும். நாம் தமிழ் வாரம், தமிழ் மாதம் கொண்டாடலாமே. வேறு மொழியைக் கொண்டாடினால், தமிழ் சிறுமைப்படுத்தப்பட்டு விடுமா?
பா.ஜ.,வினரை, தமிழுக்கு எதிரானவர்கள் போல சித்தரிக்க முயல்கின்றனர்; அது தவறு. மொழியை வைத்து அரசியல் செய்வதில் இருந்து தி.மு.க., வெளியே வர வேண்டும்.
மும்மொழி கொள்கையை தி.மு.க., எதிர்க்கிறது. கூடவே சமஸ்கிருதத்தையும் எதிர்க்கின்றனர். ஆனால், கல்வி அமைச்சர் மகேஷ், பள்ளியில் உருது மொழியில் பெயர் எழுதியது என்ன பொய்மொழிக் கொள்கையா?
உதயநிதி, திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டுள்ளார். கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்; மகிழ்ச்சி அளிக்கிறது. ஆந்திராவின் பவன் கல்யாண் கூறியது, உதயநிதி மனதில் தைத்துள்ளது போலும்.
கோவையில் வெடிகுண்டு புரளிகள் வந்துள்ளன. அதை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. தீவிர நடவடிக்கை தேவை. நீட் தேர்வுக்கான பயிற்சிக்குச் செல்லாமல் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களும், 7.5 சதவீத ஒதுக்கீடு அல்லாமல் 78 அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.