அரசியல் களத்திற்கு வராத விஜய் தே.மு.தி.க., பிரேமலதா கடுப்பு
அரசியல் களத்திற்கு வராத விஜய் தே.மு.தி.க., பிரேமலதா கடுப்பு
ADDED : நவ 17, 2025 01:23 AM

மதுரை: ''த.வெ.க., தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வந்து பணிகள் செய்ய வேண்டும். செய்தியாளர்களை கூட சந்திக்காத கட்சி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை,” என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதை நான் கவலையுடன் பார்க்கிறேன். தமிழகத்திற்கு முதலீடு வராததற்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதால் மட்டுமே, அவர்களின் தேவை பூர்த்தியாகி விடாது. அவர்களது தேவையை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்
வாக்காளர் திருத்த பட்டியல் பணியில், தேர்தல் கமிஷன் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.
கடந்த 2011ல் மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது.
அதனால், நான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனினும், எங்கு போட்டி என இப்போதே கூற முடியாது.
எஸ்.ஐ.ஆர்., க்கு எதிராக த.வெ.க., போராட்டம் நடத்துவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. த.வெ.க., தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வர வேண்டும்; பணிகளை செய்ய வேண்டும்.
செய்தியாளர்களையே சந்திக்காத த.வெ.க., பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. பீஹாரில், முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். ஆனால், அவரது கூட்டணி கட்சியினர் தோல்வியடைந்துள்ளனர். அதற்காக, விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
எங்கு பார்த்தாலும் கொலை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இரும்புக்கரம் கொண்டு அதைக் காப்பது முதல்வரின் கடமை.
இவ்வாறு கூறினார்.

