விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 26, 2024 06:20 AM

கரூர் : கொலை மிரட்டல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் அருகே, நிலம் அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் கடந்த, 22ல் உத்தரவிட்டது.
கரூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் நிறைவு பெற்றதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், விஜயபாஸ்கரை கரூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தினர். தொடர்ந்து, தொழிலதிபர் பிரகாஷும், அதே நிலம் அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, ஜூன் 22ல் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நேற்று விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பரத்குமார் விசாரித்து, மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் அளித்து வாங்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதே நீதிமன்றத்தில், நில அபகரிப்பு வழக்கில் மேலும், 2 நாட்கள் நீதிமன்றம் காவல் கேட்டு சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுமட்டுமின்றி, நில அபகரிப்பு விவகாரத்தில் உடந்தையாக இருந்த சென்னை வில்லிவாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் நேற்று பிரித்விராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

