கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம் விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தகவல்
கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம் விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தகவல்
ADDED : பிப் 01, 2026 03:23 AM

திண்டிவனம்: “பா.ம.க., யாருடன் கூட்டணி அமைப்பது என இதுவரை முடிவு செய்யவில்லை,” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தரப்பு பா.ம.க., சார்பில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., தலைமையகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது.
சென்னை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேர்காணல் நடத்தினார். கட்சியின் கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி உடன் இருந்தனர்.
நேற்று 800 பேரிடம் நேர்காணல் நடந்தது. நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், 'யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், தனித்து நின்றால் போட்டியிடுவீர்களா' என கேள்விகள் கேட்கப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகத்திடம், 'எவ்வளவு செலவு செய்வீர்கள்' என கேட்டதற்கு, 'எவ்வளவு தொகை என்றாலும் செலவழிப்பேன்' என பதிலளித்தார்.
உடனே, 'வாய்க்கு வந்ததை எல்லாம் கூறாதீர்கள். செலவு செய்வதை மட்டும் கூறுங்கள்' என ராமதாஸ் தெரிவித்தார்.
பின்னர், ராமதாஸ் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிட, 4,109 பேர் விருப்ப மனு கொடுத்தனர். முதற்கட்டமாக 13 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெறும். பா.ம.க., யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.
கடந்த சில நாட்களாக, தி.மு.க., அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியிடுவது குறித்து ராமதாசிடம் கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை' என்றார்.

