கொள்கை பிடிப்புள்ளவர்களாக கட்சியினரை வளர்த்தெடுக்க வேண்டும் * முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கொள்கை பிடிப்புள்ளவர்களாக கட்சியினரை வளர்த்தெடுக்க வேண்டும் * முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஆக 22, 2025 02:26 AM

சென்னைஊ ; ''துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூன்று பேரையும், 'இடி,- மின்னல், மழை' என, வரலாறு பதிவு செய்திருக்கிறது. அவர்கள் மூன்று பேரும் கேள்வி எழுப்பினால், சட்டசபையே அதிரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய, 'நியாயங்களின் பயணம், மவுனமாய் உறங்கும் பனித் துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள்' மற்றும் 'இடி முழக்கம்' எனும் ரகுமான்கான் சட்டசபை பேருரைகள் ஆகிய நுால்களை, சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ரகுமான்கான் பேச்சுக்கும்- எழுத்துக்கும் ரசிகன் நான். அவர் பேச்சு, சட்டசபையில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுதும் வெடி முழக்கமாகவும் எதிரொலிக்கும்.
எம்.ஜி.ஆர்., எத்தனையோ முறை ரகுமான்கானை, தன் கட்சிக்கு வரச் சொல்லி அழைத்தார். ஆனால், சிறிய சஞ்சலம் கூட இல்லாமல், கொள்கை உறுதியுடன் தி.மு.க.,வில் இருந்தவர் ரகுமான்கான்.
சட்டசபையில் ரகுமான்கான் எப்படியெல்லாம் செயல்பட்டார் என, இன்றைக்கு இருக்கக் கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். எம்.ஜி.ஆர்., முதல்வர். சட்டசபைக்குள்ளே தி.மு.க.,வுக்காக உறுதியுடன் நின்று, கட்சியை காப்பாற்றிய எம்.எல்.ஏ.,-க்களில் முக்கியமான மூன்று பேரை சொல்ல வேண்டும்.
துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூன்று பேரையும், 'இடி,- மின்னல், மழை' என, வரலாறு பதிவு செய்திருக்கிறது. அவர்கள் மூன்று பேரும் கேள்வி எழுப்பினால், சட்டசபையே அதிரும்.
சட்டசபையில் பேச முடியாததை, மக்கள் மன்றத்தில் பேசச் சொல்லி அனுப்பி வைத்தபோது, தமிழகம் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சில ஊர்களில் இவர்கள் கூட்டங்களை அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் காசு கொடுத்து, டிக்கெட் வாங்கி, இவர்கள் பேசுவதை கேட்டனர்.
என்னைப் பொறுத்தவரைக்கும் கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும்.
கட்சியில் எத்தனைக் கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்களை கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும்போல தி.மு.க., துணை நிற்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.