விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இலக்கை நோக்கி செயல்படணும்; பிரேமலதா
விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இலக்கை நோக்கி செயல்படணும்; பிரேமலதா
ADDED : மார் 08, 2026 05:42 PM

சென்னை: “விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதற்கு எல்லாம் நாம் கவனம் செலுத்தி ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், நாம் அடைய வேண்டிய தூரம், நமது இலக்கை அடைய வேண்டிய பயணத்தில் நமது சிந்தனை சிதறும். விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும்.
வேறு எதுவுமே தேமுதிக மேல் குறை சொல்ல முடியாதவர்கள், வேறு எதையாவது விஜயகாந்த் மீது பழியை போட்டார்கள், அதே மாதிரி ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி பிளாக் மார்க் கொண்டு வர முடியுமா என்று செயல்படுகின்றனர். அதை தான் நான் ஒரே வரியில் சொல்கிறேன்.
குறை சொல்லாத வாயும், குரைக்காத நாயும் இந்த உலகத்திலேயே கிடையாது. அதனால் குறை சொல்கின்றவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். குரைக்கிற நாய் குரைத்துக் கொண்டே தான் இருக்கும். நம்ம வேலை ஏதோ அந்த வேலையை செய்து கொண்டு நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இவ்வாறு பிரேமலதா கூறினார்.

