நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை 16 சதவீத ஓட்டு பெறுவோம்: சீமான் நம்பிக்கை
நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை 16 சதவீத ஓட்டு பெறுவோம்: சீமான் நம்பிக்கை
ADDED : ஜன 25, 2026 05:54 AM

சென்னை: ''நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில், 16 சதவீத ஓட்டுகளை பெற்று, சட்ட சபைக்கு செல்வோம்,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நா.த.க., தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலர்களுக்கான மாநில கலந்தாய்வு கூட்டம், தாம்பரம், சேலையூரில் நேற்று நடந்தது.
இதில், சீமான் பேசியதாவது:
தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கடந்த முறை பழனிசாமி, இந்த முறை ஸ்டாலின். தி.மு.க.,வில் இருக்கும் முதன்மையான அமைச்சர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அதன்பின், எப்படி மாற்றம் ஏற்படும்?
நம் அரசியலுக்கும், தத்துவத்திற்கும் யாரும் போட்டி போட முடியாது. அதனால், நமக்கு யாரும் போட்டியாளர்கள் இல்லை. என் கருத்துடைய கட்சிகள் ஏதும் இல்லாததால், தனித்து போட்டியிடுகிறேன்.
கூட்டணியில் மாற்றம் என்பது காசுக்காகவும், சீட்டுக்காகவும் நடக்கிறது. மற்றொரு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்றால், தனி கட்சி எதற்கு?
ஜாதி, மதம் சொல்லி, பணம், கொலுசு, மூக்குத்தி எல்லாம் அவர்கள் கொடுத்தாலும், நம் மக்கள் 8.22 சதவீத ஓட்டை நமக்கு அளித்துள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், 16 சதவீத ஓட்டுகளை பெறுவோம்; நாங்கள் சட்டசபை செல்வோம். நாங்கள் பேசும்போது, ஆளுங்கட்சியே வெளிநடப்பு செய்யும் காலம் வரும்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொன்ன கட்சிக்கு, தற்போது அது தான் தட்டுப்பாடு.
இறைவனை விமர்சித்தவர்கள், ஈ.வெ.ரா.,வை விமர்சிக்க விட மாட்டார்கள். விமர்சித்தால், நம் வீட்டுப் பெண்களை இழிவாக பேசுவது தான், அவர்கள் கோட்பாடும், கொள்கையும். அதுதான் முற்போக்கு, சீர்திருத்தம், பெண்ணியம்.
பாரதியின் கடப்பாரையை எடுத்தால் அலறுகின்றனர். அடுத்த கருத்தரங்கு, பாரதியின் இரும்பு கடப்பாரையும், ஈ.வெ.ரா.,வின் பிரம்பு கைத்தடியும் என்று போடுவேன். தேர்தல் நேரம் என்பதால், இப்போதைக்கு நேரமில்லை; தேர்தலை முடித்து விட்டு வைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.

