UPDATED : நவ 30, 2024 09:30 AM
ADDED : நவ 29, 2024 10:59 PM

சென்னை: வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது, கடலோர மாவட்டங்களில், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் பலத்த புயல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலை சமாளிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும், மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளன.
தெற்கு வங்கக்கடலில், கடந்த, 25ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நேற்று முன்தினம் புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், காற்று முறிவு பாதிப்புகள் நேற்று காலை முதல் சீரடைய துவங்கின.
இதையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல், 2:30 மணி அளவில் புயலாக வலுவடைந்தது. இதற்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளபடி, 'பெஞ்சல்' என, பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, பெஞ்சல் புயல் நாகப்பட்டினத்தில் இருந்து, 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 270 கி.மீ., துாரத்திலும், சென்னையில் இருந்து, 300 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இந்த புயல், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, புதுச்சேரி அருகே இன்று மாலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு, 70 முதல், 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும். அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று, 20 செ.மீ., வரை மிக கன மழை பெய்யலாம் என்பதால், அதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 12 செ.மீ., வரை கன மழை பெய்யும்
நாளை
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில், நாளை மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று எச்சரிக்கை
பெஞ்சல் புயல் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மணிக்கு, 70 முதல், 80 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும்.
இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
புயல் இன்று கரையை கடக்ககூடும் என்பதால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடலோர பகுதிகள், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.