அ.தி.மு.க.,வின் எதிர்காலம் என்ன? முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை
அ.தி.மு.க.,வின் எதிர்காலம் என்ன? முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை
ADDED : நவ 27, 2025 01:25 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை முடிவு செய்வதற்காக கூடிய முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையுடன் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு, டிச., 10ல் நடைபெறுகிறது. அதில், நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயராமன், ஜெயகுமார், சண்முகம், ஓ.எஸ்.மணியன், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டம் --- ஒழுங்கு பிரச்னை, கோவை, மதுரை மெட்ரோ திட்டம், நெல் ஈரப்பதத்தை 22 சத வீதமாக அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள், பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த தகவல் வந்தது.
இந்த தகவல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், பொதுக்குழு தீர்மானங்களை பற்றி ஆலோசித்தவர்கள், செங்கோட்டையன் ராஜினாமா குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பெரும் வெற்றியை தந்த கொங்கு மண்டலத்தில், செங்கோட்டையன் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அ.தி.மு.க.,வுக்கு இழப்பு ஏற்படுமோ என்பது குறித்தும், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ எனவும் அவர்கள் ஆலோசித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

