'ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்'
'ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்'
ADDED : ஜூலை 27, 2025 01:15 AM
சென்னை:பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
மத்தியில் காங்.,கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தவறு. தெலுங்கானாவில் இப்போது நடத்தப்பட்டது போன்ற சமூகத்தின் 'எக்ஸ்ரே பதிவைக் காட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்க முடியாது' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
'மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பால், மாநிலங்களின் சமூக நீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூக நீதித் தேவைகளுக்காக தனித்தனியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்பது தான் ராகுல் கருத்தின் பொருள்.
இதைத்தான், நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தக் கருத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும், அவரால், அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒவ்வொரு ஜாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டு வரக்கூடியது.
அந்த விவரங்கள் வெளி வந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதல்வர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை.
ஆட்சியை இழந்து,பத்தாண்டுகளுக்குப் பிறகு ராகுல் உணர்ந்த தவறை ஸ்டாலின் பதவிக் காலத்திலேயே உணர வேண்டும்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

