ஏலத்தில் விற்கப்படும் சொத்துக்கள் பதிவுக்கு 11 சதவீத கட்டணம் ஏன்?
ஏலத்தில் விற்கப்படும் சொத்துக்கள் பதிவுக்கு 11 சதவீத கட்டணம் ஏன்?
UPDATED : மார் 13, 2024 02:39 AM
ADDED : மார் 12, 2024 08:09 PM

சென்னை:வழக்கமான சொத்து விற்பனை பதிவு கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், வங்கிகள் ஏலத்தில் விற்கும் சொத்துக்களுகு, 11 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் வீடு, மனை விற்பனை செய்யும் போது, அதற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்ய, 7 சதவீதம் முத்திரை தீர்வை, 4 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. வங்கிகள் ஏலம் வாயிலாக நடக்கும் சொத்து பரிவர்த்தனைக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வருவாய் இழப்பு
இது தொடர்பாக, 2016ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 'கடனீட்டு சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை பரிமாற்றம் செய்ய, வழக்கமான அளவில் முத்திரை தீர்வை வசூலிக்கக் கூடாது' என, 2022ல் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை அமல்படுத்தினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று பதிவுத்துறை கருதியது.
எனவே, வங்கிகள் ஏலம் வாயிலாக நடக்கும் சொத்து பரிமாற்றம் தொடர்பான விற்பனை சான்றிதழை பதிவு செய்யும் போது, நடைமுறை கட்டணம் என்ற அடிப்படையில், 11 சதவீத தொகையை வசூலிக்கலாம் என்று பதிவுத்துறை, 2022ல் சுற்றறிக்கை பிறப்பித்தது.
மாற்றுவது அவசியம்
இதன் அடிப்படையில், அனைத்து பரிமாற்றங்களுக்கும், 11 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2023ல், வழக்கமான சொத்து விற்பனை பத்திரங்களுக்கு, பதிவு கட்டணம், 4 சதவீதத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், வங்கிகள் ஏலம் வாயிலாக நடக்கும் சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் தொடர்ந்து, 11 சதவீதமாகவே கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- பி.பாலமுருகன்,
ரியல் எஸ்டேட்சொத்து மதிப்பீட்டாளர்

