முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு 136 அடியை எட்டுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு 136 அடியை எட்டுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 05:34 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மே 23 துவங்கியது. துவங்கியவுடன் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்தது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் 115 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 130 அடிக்கு மேல் உயர்ந்தது. சில நாட்களாக மழை குறைந்து நீர்வரத்து மற்றும் நீர்மட்டமும் குறைய துவங்கியது.
இந்நிலையில் 2 நாட்களாக பருவ மழை மேலும் தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 24.4 மி.மீ., தேக்கடியில் 19.8 மி.மீ., மழை பதிவானது.
அணைக்கு 1190 கன அடியாக இருந்த நீர்வரத்து 2131 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து 128.4 அடியாக இருந்தது. மொத்த உயரம் 152 அடி. தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 1622 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4352 மில்லியன் கன அடியாகும்.
பருவ மழை 2வது முறையாக தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அணையின் நீர்மட்டம் 136 அடியைக் கடந்தால் தற்போது நடக்கும் முதல் போக நெல் சாகுபடிக்கும், தொடர்ந்து இரண்டாவது போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. தற்போது தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ள கூடுதல் நீரை சற்று குறைத்து நீர்மட்டம் 136 அடியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.