மருதமலையில் 184 அடி முருகன் சிலை உண்டா, இல்லையா: அக்.,10ல் தெரியும்
மருதமலையில் 184 அடி முருகன் சிலை உண்டா, இல்லையா: அக்.,10ல் தெரியும்
ADDED : செப் 26, 2025 11:21 PM
சென்னை:கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரத்தில், முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட கோரிய வழக்கில், ஹிந்து அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக, முக்கியமான பகுதியாகும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து, பிற வனப்பகுதிகளுக்கு செல்ல, யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 184 அடி உயரத்துக்கு, முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டி உள்ளது. இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதுமட்டுமின்றி, விலங்குகள்-, மனித மோதல்கள் அதிகரிக்கும்.
மேலும், முருகன் சிலை அமைக்க, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கர வர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தர விட்டு, விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.