போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா?
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா?
ADDED : ஜூலை 15, 2024 06:08 PM

சென்னை: 'அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, நிதித்துறை செயலருக்கு, போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் நிதித்துறைச் செயலருக்கு, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்க மாநிலத் தலைவர் கதிரேசன் அனுப்பியுள்ள கடிதம்:
வறுமையில் உள்ள 93 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றங்களில் அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடுகளை திரும்ப பெற வேண்டும்.
வறுமை, முதுமையில் தவித்து வரும் ஓய்வூதியர்களுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அல்லது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேம நலநிதி, பணப் பலன்களை வழங்குவதில், போக்குவரத்துக் கழக நிர்வாகம் செய்யும் குளறுபடிகளை நீக்க வேண்டும்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல், கடந்த ஆண்டு ஜூன் வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும். 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் வாரிசுதார்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

