யாருடன் பா.ம.க., கூட்டணி: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி
யாருடன் பா.ம.க., கூட்டணி: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி
ADDED : ஜன 08, 2024 05:33 AM
திண்டுக்கல் : ''வரும் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார்,'' என, திண்டுக்கல்லில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறினார்.
அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளாகியும் இம்மாவட்டத்தில் பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க., கொள்கை. இன்றைய நிலையில் வீடு வீடாக மது விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாருக்கு பதவி உயர்வு என அறிவித்தால் மது விற்பனையை தடுக்க முடியும். அதன் மூலம் கொலை, கொள்ளை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.
தனியார் தொழிற்சாலைகளில் மண்ணின் மைந்தர்களுக்கு கல்வித் திறன் அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் ஒவ்வொருவருக்கும் ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கட்சிக்காரர்கள் மூலமாகவோ அதிகாரிகள் மூலமாகவோ ஆய்வு செய்து வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியை மீண்டும் பா.ம.க.,வுக்கு கேட்டுப் பெற முயற்சிப்போம் என்றார்.