மலைகளில் இயக்கப்படும் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி
மலைகளில் இயக்கப்படும் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி
ADDED : மார் 16, 2024 12:48 AM
சென்னை:மலைப் பகுதிகள் மற்றும் பகுதி மலைப் பகுதிகளில் இயக்கப்படும், சாதாரண கட்டணப் பஸ்களில், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை விரிவுப்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2021 மே 7ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சாதாரண கட்டண நகரப் பஸ்களில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநங்கையர் நல வாரியத்தில், பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள திருநங்கையரும், இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் மகளிர் பயன்பெறும் வகையில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும், இத்திட்டம் விரிவுப்படுத்தப் படும் என, கடந்த பிப்.,19ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, பட்ஜெட்டில் 3,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
விழுப்புரம், சேலம், கோவை, மதுரை மாவட்டங்களில், 475 மலைப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நுாறு சதவீதம் மலைப்பகுதிகள் மற்றும் பகுதி மலைப் பகுதிகளில் இயக்கப்படும், சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்.
அதற்கான இழப்பீட்டு தொகையை, ஒரு பயனாளிக்கு 22 ரூபாய் வீதம், சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கவும், அனுமதி வழங்கக் கோரி, போக்குவரத்து துறை தலைவர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதை ஏற்றுக் கொண்ட அரசு, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து பெண்களும், சாதாரண கட்டண பஸ்களில், பஸ் வசதி உள்ள பகுதிகளில், 35 கி.மீ., வரையிலும், பஸ் வசதி இல்லாத பகுதிகளில், 40 கி.மீ., வரை பயன்பெறும் வகையில்,விடியல் பயண திட்டத்தை விரிவுப்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீடை ஈடு செய்ய, ஒரு பயனாளிக்கு 22 ரூபாய் வீதம், போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளீதரன் வெளியிட்டுள்ளார்.

