காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி விறுவிறு
காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி விறுவிறு
ADDED : பிப் 12, 2026 05:58 AM

பாரிமுனை: மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம், 'ஹைட்ராலிக் ஜாக்ஸ்' உதவியுடன் உயர்த்தும் பணி வேகமெடுத்துள்ளது.
பிராட்வே, மண்ணடி அடுத்த தம்புச் செட்டி தெருவில், 400 ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 1983ம் ஆண்டு கட்டப்பட்டது.
தற்போது சாலை மட்டத்தை விட கோவில் ராஜகோபுரம் பள்ளத்தில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில், வெள்ளம் தேங்கி, கோவிலுக்குள் வழிந்தோடுவது வாடிக்கையாக மாறியது; தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து, கோவிலை சாலை மட்டத்தில் இருந்து உயர்த்தி அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. இதை முன்னிட்டு, 'ஹைட்ராலிக் ஜாக்ஸ்' எனும் ஜாக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஜகோபுரத்தை 5 அடி உயரத்திற்கு உயர்த்தி அமைக்கும் பணியை, கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
மேலும், கோவில் சுவர் மற்றும் சிற்பங்கள் புனரமைப்பிற்காக பாரம்பரிய சுண்ணாம்பு, வெல்லம் போன்ற பொருட்களை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், கோவில் வாயிற்பகுதி ஒருபாதி கதவில் விஸ்வகர்மா காளிகாம்பாள், காயத்ரி தேவியும், மறுபாதி கதவில் மகாலட்சுமி, காளிகாம்பாள், சரஸ்வதி என முப்பெரும் தேவியரின் சிற்பங்களும், 30 அடி உயரத்தில் செம்பு தகட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. பணிகள் முடிந்தபின், தங்க முலாம் பூசப்பட உள்ளது.
இதற்கான பணிகளை, அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், ரா.ராஜேந்திரகுமார், ஜே.ரமேஷ் ஆகியோருடன், ஸ்ரீ காளிதாஸ் சிவாச்சாரியார் அறக்கட்டளையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து கோவிலின் அறங்காவலர் ராஜேந்திரகுமார் கூறுகையில், ''விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக, பணிகள் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடந்துவருகிறது,'' என்றார்.

