கணைய அழற்சி பாதிப்புக்கு யோகா மருத்துவத்தில் தீர்வு
கணைய அழற்சி பாதிப்புக்கு யோகா மருத்துவத்தில் தீர்வு
ADDED : ஜூன் 11, 2025 01:22 AM
சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறையை பின்பற்றிய நோயாளிக்கு, கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு, படிப்படியாக குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் கைநுட்பத் துறை தலைவர் ஒய்.தீபா தலைமையில், இந்திய மருத்துவ முறை ஆய்வாளர்கள் ஏ.விஜய், கே.பத்மாவதி, ஆர்.நித்யஸ்ரீ, மூவேந்தன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரை:
கணைய அழற்சி என்பது, உடலில் உள்ள கணையத்தில் சேதம் அல்லது வீக்கம் ஏற்படும் நிலை. அந்த பாதிப்பு தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், கணையத்தால் மேற்கொள்ளப்படும் அகச்சுரப்பி மற்றும் புறச்சுரப்பி பணிகளில் சிக்கல் ஏற்படும்.
அதேபோல், அழற்சி உள்ளவர்களுக்கு கணையத்தின் வெளிப்பகுதியில், 'சூடோசிஸ்ட்' எனப்படும் நீர்க்கட்டி உருவாகும். உலக அளவில் லட்சத்தில், 163 பேர் வரை கணைய அழற்சி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அதில் நாள்பட்ட கணைய அழற்சிக்கு உள்ளாகும், 40 சதவீதம் பேருக்கும், குறுகிய கால அழற்சிக்கு உள்ளாகும், 26 சதவீதம் பேருக்கும், 'சூடோசிஸ்ட்' கட்டிகள் உருவாகின்றன.
அத்தகைய பாதிப்புடன், 23 வயது பெண், சில மாதங்களுக்கு முன், இயற்கை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர வயிற்று வலி, மலம் கழித்தலில் பாதிப்பு, கால்களில் எரிச்சல், எடை இழப்பு ஆகிய பாதிப்புகள் இருந்தன. பரிசோதனையில் அவருக்கு தீவிர கணைய அழற்சி மற்றும் பெரிய அளவிலான கட்டி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'பவனமுக்தாசனா, வக்ராசனா' உள்ளிட்ட ஏழு வகையான ஆசனங்கள், பிராணாயாம பயிற்சிகள், அதனுடன் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 20 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பயனாக, அவரது கணைய கட்டி பாதிப்பும், அழற்சியும் குறைந்தது, 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது, நோயாளியின் உடல்நிலையை பொறுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு. மேலும் நுட்பமாக அறிய கூடுதல் ஆய்வு தேவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.