ADDED : மே 09, 2025 09:40 PM
சென்னை:பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள், துணைத்தேர்வு எழுத, 14 முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள், துணைத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால், இதே ஆண்டில் உயர் கல்வியை பெறலாம்.
துணைத் தேர்வு எழுத, அவர்கள் படித்த பள்ளிகளில், 14 முதல், 29ம் தேதி வரை, காலை 11:00 -- மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதி
வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாதவர்கள், சிறப்பு அனுமதி திட்டம் வாயிலாக 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, 30, 31ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த தகவல்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. தேர்வு, ஜூன் 26 முதல், ஜூலை 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.