UPDATED : மே 05, 2024 10:41 AM
ADDED : மே 04, 2024 11:59 PM
டொரான்டோ : கனடாவில், சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய தம்பதியின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின், பாமன்வில்லே நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில், சமீபத்தில் கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் சரக்கு வேனில் தப்பிச் சென்றார். அவரை போலீசார் துரத்தினர்.
அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401-ல் தவறான பாதையில் அதிவேகமாக சென்றதால், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குஉள்ளானது.
இதில், அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதின.
இந்த விபத்தில், ஒரு காரில் இருந்த இந்திய தம்பதி, அவர்களின் 3 மாத பேரக்குழந்தை மற்றும் சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து கனடா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய தம்பதி அடையாளம் காணப்பட்டனர்.
இது குறித்து கனடாவில் உள்ள நம் துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'தேசிய நெடுஞ்சாலை 401ல் நிகழ்ந்த சாலை விபத்தில், இந்தி யாவைச் சேர்ந்த மணிவண்ணன், மகாலட்சுமி மற்றும் அவர்களது பேரக்குழந்தை பலியாகியுள்ளது. அவர்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்' என குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.