ADDED : நவ 01, 2025 04:44 AM
ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகள் இரண்டு பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்த நிலையில், பதிலுக்கு 30 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.
ஒப்பந்தம் மேற்காசிய நாடான இஸ்ரேல் -- பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டின்படி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, சண்டை தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பதிலுக்கு இஸ்ரேலும் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவித்து வருகிறது. கொல்லப்பட்ட 28 பிணைக்கைதிகளில், 17 பேரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். இன்னும், 11 உடல்கள் ஒப்படைக்கவில்லை.
பிணைக்கைதிகள் இந்நிலையில், 2023, அக்., 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது, பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட சஹர் பாரூக் மற்றும் அமிரம் கூப்பர் என்ற இருவரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர்.
இதையடுத்து, 30 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசா சுகாதார அமைச்சகத்திடம் இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.
காசா அதிகாரிகளிடம் இதுவரை 195 பாலஸ்தீனியர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் அடையாளங்கள் குறித்த விபரங்கள் வழங்கப்பட வில்லை.

