ADDED : அக் 25, 2025 11:50 PM
ஹானோய்: டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஒரு மைல்கல்லாக, ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச இணைய குற்றத் தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கிழக்காசிய நாடான வியட்நாமின் ஹானோய் நகரில் நடந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இந்த சர்வதேச இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகள் பேச்சுக்கு பின், கடந்த 2024 டிசம்பரில் ஐ.நா., பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இணையத்தில் நடக்கும் குற்றங்களான நிதி மோசடி, ஒருவரின் அனுமதியின்றி அந்தரங்க புகைப்படங்களை பகிர்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரிக்கவும், வழக்கு தொடரவும் தேவையான உலகளாவிய சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்திட்டாலும், 40 நாடுகள் ஒப்புதல் அளித்த 90 நாட்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளன. கையெழுத்திடும் நிகழ்வு என்பது ஒரு நாடு இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான அதன் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது.
கையெழுத்திட்ட நாடுகள் அனைத்தும் தங்கள் உள்நாட்டு சட்டங்களை மாற்றி, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதை உறுதிப்படுத்தவே இந்த குறைந்தபட்ச எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

