ADDED : செப் 25, 2024 02:11 AM
டோக்கியோ,கிழக்காசிய நாடான ஜப்பானின் தீவு பகுதிகளான இசு மற்றும் ஒகசவாராவை ஒட்டியுள்ள இடங்களில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 300 கி.மீ., தொலைவில் உள்ள இந்த பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.
இசு மற்றும் ஒகசவாரா தீவுகளின் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் சுனாமி அலை 1 மீட்டர் உயரத்தில் தாக்கக்கூடும் என, ஜப்பான் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் ஹச்சிஜோ தீவில் உள்ள யேனே மாவட்டத்தில் சிறிய உயரத்திலான சுனாமி அலை தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதேபோல் கொசுஷிமா, மியோகேஜிமா மற்றும் இசு ஓஷிமா ஆகிய மூன்று தீவுகளிலும் சிறிய அளவிலான அலைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.