ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை
ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை
ADDED : நவ 28, 2025 06:29 AM

டாக்கா: ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்டில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர் போராட்டத்தையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இளைஞர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பில், ஒவ்வொரு வழக்கிலும் தலா ஏழு ஆண்டுகள் என, மொத்தம் 21 ஆண்டுகள் ஹசீனாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹசீனா மட்டுமின்றி, அவரது மகன் சஜீப் வஜித் பாய் மற்றும் மகள் சைமா வஜித் புத்துல் ஆகியோருக்கும், தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

