இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!....: விவசாயிகள், மீனவர்கள், ஜவுளி துறையினருக்கு வளர்ச்சி
இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!....: விவசாயிகள், மீனவர்கள், ஜவுளி துறையினருக்கு வளர்ச்சி
UPDATED : ஜூலை 25, 2025 03:53 PM
ADDED : ஜூலை 25, 2025 01:19 AM

லண்டன்: இந்தியா - பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, ''இரு நாட்டு உறவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்,'' என, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து மோடி பேசினார்.
அப்போது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது, உக்ரைன் போர் மற்றும் மேற்காசிய நிலவரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஆமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை அந்நாட்டு பிரதமரிடம் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஸ்டாமர் முன்னிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையழுத்தானது.
பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:
நடவடிக்கை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை வலுவாக கண்டித்த பிரிட்டன் பிரதமருக்கு நன்றி. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை.
இதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பயங்கரவாத சித்தாந்தங்கள் கொண்ட சக்திகள் ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்தியா - பிரிட்டன் இடையே பாதுகாப்பு விவகாரங்களில் விரிவான கூட்டுறவு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தொடர முடிவெடுத்துள்ளோம். பொருளாதார குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையே நீடிக்கும்
இந்தியா - பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, பிரிட்டன் சந்தைக்குள் இந்திய விளைப் பொருட்களும், பதப்படுத்தப்பட்ட உணவு களும் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயன் பெறுவர்.
இந்திய ஜவுளிகள், காலணி, நகை, கடல்சார் உணவு, பொறியியல் சரக்குகள் இனி பிரிட்டன் சந்தைக்குள் எளிதாக நுழையும். தற்போதைய காலத்தின் தேவை விரிவாக்கம் அல்ல; வளர்ச்சிமயம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் பேசிய தாவது:
இந்தியா - பிரிட்டன் இடையே இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய லாபத்தை கொண்டு சேர்க்கப் போகிறது.
உழைக்கும் மக்களின் பாக்கெட்டுகளில் இனி கூடுதலாக பணம் புழங்கப் போகிறது. தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும். வாழ்க்கைதரம் உயரும்.
பரஸ்பர வர்த்தகம் இந்த ஒப்பந்தம் வேலைகள், தொழில்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.
வரிகள் ரத்தாவதால் இரு தரப்பிலும் பரஸ்பரம் வர்த்தகம் எளிதாகும்.
பொருட்கள் விலை கணிசமாக குறையும். ஐரோப்பிய யூனியனான, 'பிரெக்ஸிட்'ல் இருந்து வெளியேறிய பின், பிரிட்டன் மேற்கொள்ளும் முக்கியமான மற்றும் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது.
இவ்வாறு அவர் பேசினார்.