ஹார்முஸ் அருகே எப்15 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
ஹார்முஸ் அருகே எப்15 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
ADDED : மார் 22, 2026 04:34 PM

டெஹ்ரான்: ஹார்முஸ் அருகே எதிரி நாட்டைச் சேர்ந்த எப்15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
23 நாட்களாக நீடித்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரினால், ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான நீர் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு 48 மணிநேரம் கெடு விதித்தார்.
இந்த நிலையில், ஹார்முஸ் பகுதியில் எதிரி நாட்டின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹார்முஸ் தீவு அருகே, எப்-15 ரக விமானத்தை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.
'டெஹ்ரான் டைம்ஸ்' தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஈரான் பாதுகாப்புப் படைகள் எப்-15 விமானத்தைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் 29 விநாடி வீடியோவை வெளியிட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த எப்-15 போர் விமானம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமானதா அல்லது இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமானதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதனிடையே, ஈரான் 400 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 92 சதவீத ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

