மகன் திருமணத்தை ஒத்திவைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
மகன் திருமணத்தை ஒத்திவைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ADDED : ஜூன் 16, 2025 12:48 AM

ஜெருசலேம்: ஈரான் உடனான சண்டையால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மகனுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை ஒத்தி வைத்தார்.
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே, கடந்த மூன்று நாட்களாக கடும் சண்டை நிலவி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இரண்டாவது மகன் அவ்னெர் நெதன்யாகு, அமித் யார்தெனி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்ய இருந்தார். இதற்கான தேதி முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் டெல் அவிவ் அருகே பரந்த அளவிலான பண்ணை வீட்டில் செய்யப்பட்டிருந்தன. திருமணத்தை பெரிய கொண்டாட்டமாக நடத்த இருந்தனர். பண்ணை வீட்டை சுற்றிலும் இருந்த சாலைகள், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. வான் பரப்பில் போலீஸ் ஹெலிகாப்டரை தவிர மற்ற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஈரான் உடன் சண்டை துவங்கியுள்ளதால், திருமணத்தை நடத்துவது சர்ச்சையாகும் என கருதி, ஒத்தி வைத்துள்ளனர். மற்றொரு தேதியில் எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.