பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்!
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்!
ADDED : நவ 09, 2024 11:52 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 27 பேர் உயிரிழந்தனர்; 62 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பலுாசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா ரயில் நிலையம் உள்ளது. பெஷாவர் நகருக்கு செல்ல இந்த ரயில் நிலையத்தில் நேற்று காலை 9:00 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட பயணியர் காத்திருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் அலறியடித்தபடி பயணியர் அங்குமிங்கும் ஓடினர்.
தடுப்பது கடினம்
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 27 பேர் உயிரிழந்தனர்; 62 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து குவெட்டா பிரிவு கமிஷனர் ஹம்சா ஷப்காத் கூறுகையில், ''இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். இதை நடத்திய நபர், லக்கேஜ் உடன் ரயில் நிலையத்துக்கு வந்தார்.
''உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வரும் நபரை தடுப்பது கடினம். ரயில் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 27 பேர் உயிர் இழந்தனர்,'' என்றார்.
இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு, பலுாசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பலுாசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில், ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலைப் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பலுாசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, ''அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணமான நபர்களை சும்மா விட மாட்டோம்,'' என்றார்.
தனி நாடாக்க திட்டம்
பலுாசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதே இந்த அமைப்பின் நோக்கம். இதற்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாக்., ராணுவம், பொதுமக்கள், பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டவர் ஆகியோரை குறிவைத்து இந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.