ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு டிரம்ப் முக்கிய தகவல்
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு டிரம்ப் முக்கிய தகவல்
ADDED : டிச 29, 2025 07:50 AM

வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமைதி ஒப்பந்தம் குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட்டாக நிருபர்களை சந்தித்துப் பேசினர். அப்போது ஜெலன்ஸ்கி பேசியதாவது: ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு அற்புதமானது. அவருடன் நிறைய விவாதித்தேன். அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார்.
இரண்டாம் உலக போருக்கு பிறகு, மிக கொடிய போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அவர்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்துவிட்டனர். தற்போது இரு அதிபர்களும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நான் அதிபர் புடினுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப் போகிறேன், நாங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமைதிக்கு தயார்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: நாங்கள் சிறந்த கலந்துரையாடலை நடத்தினோம், மேலும் இந்தச் சமீபத்திய வாரங்களில் அமெரிக்க மற்றும் உக்ரைன் குழுக்கள் பேச்சுவார்த்தை வாயிலாக அடைந்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
அமெரிக்கா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து 100 சதவீதம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலையான அமைதியை அடைவதில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம், உக்ரைன் அமைதிக்குத் தயாராக உள்ளது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

