சூடானின் கடைசி கோட்டை பறிபோனது இனப்படுகொலை அச்சத்தில் மக்கள்
சூடானின் கடைசி கோட்டை பறிபோனது இனப்படுகொலை அச்சத்தில் மக்கள்
UPDATED : அக் 30, 2025 12:45 AM
ADDED : அக் 30, 2025 12:43 AM
கார்டூம்: சூடானின் முக்கிய நகரமான எல்- - பஷாரை, ஆர்.எஸ்.எப்., என்ற துணை ராணுவ அதிரடிப்படை கைப்பற்றியதால் அங்கு இனப்படுகொலைகள் நிகழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், அல் புர்ஹான் தலைமையிலான ராணுவம் மற்றும் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படை இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
மேற்கில் உள்ள டார்பூர் மாகாணத்தின் பெரும்பாலான பகுதியை ஆர்.எஸ்.எப்., கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வடக்கு ம ற்றும் கிழக்குப் பகுதிகள் ராணுவத்தின் கீழ் உள்ளன. இந்தநிலையில், டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல் - பஷாரை பல மாதங்களாக முற்றுகையிட்டிருந்த ஆர்.எஸ்.எப்., தற்போது கைப்பற்றியுள்ளது.
இது சூடான் ராணுவத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூடானில் அரேபியர்களுக்கும், அரேபியர் அல்லாதவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது.
அங்கு சர்வாதிகார ஆட்சி செய்த அதிபர் அல் பஷீர், அரேபியர் அல்லாதவரைக் கொன்றதாக போர்க்குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு ஆதரவாக அப்போது ஆர்.எஸ்.எப்., படை செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ள து.
டார்பூர் மாகாணம் அரேபியர் அல்லாதவர் அதிகம் வசிக்கும் பகுதி. அது ஆர்.எஸ்.எப்., கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் 26,000க்கும் மேற்பட்டோர் எல்- - பஷாரை விட்டு வெளியேறியதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
எல் - -பஷாரில் இரண்டு லட்சம் பேர் சிக்கியுள்ளதால் இனரீதியான போர்க்குற்றங்கள் நடக்கலாம் என ஐ.நா., எச்சரித்துள்ளது.

