அமெரிக்க அதிபர் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்
அமெரிக்க அதிபர் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்
ADDED : செப் 25, 2025 12:32 AM
மாஸ்கோ:ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் இழந்த அனைத்து இடங்களையும் எளிதாக மீட்கலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்திற்கு, ரஷ்ய அதிபர் மாளிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது.
'ரஷ்யா கேட்கும் நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்' என உக்ரைனிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா., பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், உக்ரைன் தான் இழந்த நிலப்பகுதிகளை, ஐரோப்பா மற்றும் 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் உதவியுடன் மீட்கலாம் என்று குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் இந்த கருத்துக்கு, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ் கோவ் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
ஐ.நா. பொது சபை அமர்வில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததே, டிரம்ப்பின் மாற்றத்திற்குக் காரணம்.
உக்ரைன் உடனான ராணுவ மோதல் தொடர்பான டிரம்பின் அனைத்து கருத்துகளுக்கும் ரஷ்யா உடன்படாது.
ரஷ்யாவே, ஒருங்கிணைந்த ஐரோப்பாவின் ஒரு பகுதிதான். அதனால், ரஷ்யாவின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து, தங்கள் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினர்.