டெஸ்லா கார் மீது கை வைத்தால் 20 ஆண்டு சிறை: டிரம்ப் எச்சரிக்கை
டெஸ்லா கார் மீது கை வைத்தால் 20 ஆண்டு சிறை: டிரம்ப் எச்சரிக்கை
ADDED : மார் 22, 2025 05:24 AM

வாஷிங்டன் : டெஸ்லா கார்கள், ஷோரூம்கள், சார்ஜிங் நிலையங்கள், தயாரிப்பு ஆலைகள், சர்வீஸ் நிலையங்களில் யாராவது தாக்குதல் நடத்தினால், 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின், அவரது வலதுகரமாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இருக்கிறார்.
அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் துறையின் தலைவராகவும் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். சமூக ஊடக தளமான எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள், எலான் மஸ்க்குக்கு சொந்தமானவை.
வன்முறை
கடந்தமுறை டிரம்ப் அதிபராக இருந்தபோது, அவர் நடத்தும் தொழில் நிறுவனங்கள், அவரது சொத்துகளை குறி வைத்து போராட்டங்கள், வன்முறைகள் நடந்தன. அதேபோல, தற்போது எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா காரை குறி வைத்து, அமெரிக்காவின் பல இடங்களிலும் தொடர் வன்முறைகள் நடக்கின்றன.
இந்த தாக்குதல்களை உள்நாட்டு பயங்கரவாதம் என, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி குறிப்பிட்டார்.
டெஸ்லா கார் ஷோரூம்கள், தயாரிப்பு ஆலைகள், சார்ஜிங் நிலையங்கள், சர்வீஸ் நிலையங்கள், தனி நபர்கள் சொந்தமாக வைத்திருக்கும் டெஸ்லா கார்கள் ஆகியவற்றை, சிலர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
டிரம்ப் மற்றும் அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் டெஸ்லா கார்களை ஆர்வமாக வாங்கும் நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில், டெஸ்லா ஷோரூமுக்கு தீ வைத்த ஒருவர் கைதானார்.
ஒரிகான், லாஸ் வாகேஸ், கொலோரடா என, பல இடங்களிலும் பாட்டில் குண்டு வீச்சு, தீ வைப்பு என தாக்குதல்கள் தொடர்கின்றன.
சிறை தண்டனை
இந்நிலையில், டெஸ்லா மீது கை வைத்தால், 20 ஆண்டு சிறை தண்டனை உறுதி என, அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'டெஸ்லா தொடர்பான இடங்களில் நாசவேலை செய்து சிக்கிக் கொள்பவர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்து பணம் உள்ளிட்ட உதவிகளை வழங்குபவர்களுக்கு, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
'உங்களைத் தான் நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம்' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.