ஏப் 13, 2026

நிருத்ய வாட்டிகா நடனப் பள்ளியில் பயின்ற மாணவிகள் நடாஷா ரோகிலா, சிருஷ்டி சிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் 12 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை, மண்டி ஹவுஸில் உள்ள திரிவேணி கலா சங்கம் அரங்கில் நடைபெற்றது.
கேதாரம் ராகத்தில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இது பரதநாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கடவுள், குரு மற்றும் சபையினருக்கு மலர்கள் தூவி வணக்கம் செலுத்தித் தொடங்கும் ஒரு பாடல் ஆகும்.
குரு தேவிகா வெங்கடசுப்ரமணியனின் நட்டுவாங்கம் நடனத்தின் தாளக்கட்டுகளை மிகத் துல்லியமாகவும், கம்பீரமாகவும் வழிநடத்தியது. சதீஷ் வெங்கடேஷின் இனிமையான குரல் மற்றும் பாவமான பாடும் முறை நடனத்திற்குத் தேவையான உணர்ச்சிகளை மெருகூட்டியது. ராகவேந்திர பிரசாத்தின் வயலின் இசை ஒரு தனி அழகைச் சேர்த்தது. மிருதங்கத்தில் மனோகரின் தாள லயங்கள் நடனத்தின் அடவுகளுக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்தது. ஆனந்த பைரவியில் தில்லானாவுடன் அரங்கேற்றம் இனிதே நிறைவுற்றது.
சிறப்பு விருந்தினராக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி.கே.பெருமாள், பால்ஸ்ரீ திருவாரூர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளையின் அறங்காவலர் எம். வி.தியாகராஜன், கதக் நடன கலைஞர் மதன் சோலங்கி, குரு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டியக் கலைஞர்களை வாழ்த்தினர். குரு ஹர்ப்ரீதித் கவுர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் கலை ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவிகளின் நடனத் திறனைப் பாராட்டினர். அதிதி நேகி, குஷி மகஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம். வி. தியாகராஜன்
