/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சீதா கல்யாணம் உற்சவம் விழாக்கோலம்
/
சீதா கல்யாணம் உற்சவம் விழாக்கோலம்

புது தில்லி ஹரி நகர் எப். பிளாக் நாராயணி கோவில் வளாகத்தில் சீதா கல்யாண மகோத்ஸவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 6 அன்று தொடங்கிய ராமநவமி உற்சவத்தின் முத்தாய்ப்பான வைபவமாக இரண்டு நாட்கள் (12.-13 ) சீதா கல்யாணம் நடைபெற்றது. சீதா கல்யாணத்தையொட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராம நவமி மஹோஸ்தவ் சமிதி செய்திருந்தது.
நிகழ்ச்சியின் முதல் நாள் தோடய மங்கலம், குரு தியானம் மற்றும் அஷ்டபதி பஜனை நடைபெற்றது. பால கோகுலம் குழுவைச் சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் சுனில் பாகவதர் குழுவினர் இதில் பங்கேற்று நடத்தினர். என். எஸ். கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஜெயராமன் பக்க வாத்தியம் (மிருதங்கம்) வாசித்தனர்.
இரண்டாம் நாள் காலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில், உஞ்சவிருத்தியுடன் தொடங்கியது. பிறகு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக மேளதாளத்துடன் ஊர் அழைப்பு நடந்தது. பிறகு பெண் வீட்டார் சீர்வரிசை எடுத்து வந்தனர். உஞ்ச விருத்தி வீடு வீடாக சென்று ஸ்ரீ ராமருக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். சீதா கல்யாண உற்சவம் காலை 9 மணி ஆரம்பிக்கப்பட்டு மதியம் 1: 30 மணியளவில் கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு மந்திர அர்ச்சனை வழங்கப்பட்டது.
சுமார் 100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட ஸ்ரீசீதா கல்யாண உற்சவம், அறுசுவை உணவுடன் நிறைவு பெற்றது. மாலை 4.00 மணி அளவில் வசந்த கேளிக்கை ஆகியவற்றை பால கோகுலம் குழுவைச் சார்ந்த சுனில் மற்றும் ராமகிருஷ்ணன் பாகவதர்கள் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவுற்றது.
சீதா கல்யாணம் ராமாயணத்தில் சீதா தேவிக்கும் ராமருக்கும் நடந்த கல்யாணத்தை குறிக்கிறது. இது இந்து சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்