ஏப் 16, 2026

தமிழ்ப் புத்தாண்டு விழா
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தெலுங்கானா தமிழ்ச்சங்கம் சார்பாக நேரடி தமிழ் வகுப்புகள் தொடக்க விழா, செகந்திராபாத் கீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 14 ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, கீஸ் ஜூனியர் கல்லூரி பெண்கள் செயலாளர் மற்றும் நிர்வாகி டாக்டர் கீதா, ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் முரளிதரன், சங்கத்தின் தலைவர் எம்.கே. போஸ், துணைத்தலைவர் தர்மசீலன், மற்றும் செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜன் முத்துசுவாமி ஆகியோருடன் இணைந்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், மாணவர்கள் அனைவரும் “அ” என்ற தமிழ் எழுத்தை அரிசியில் எழுதி, மங்களகரமான முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் தமிழ் பாடப் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது. நேரடி தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.
இந்த முயற்சி கலந்து கொண்ட பலரிடமிருந்து பாராட்டைப் பெற்றதுடன், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி, தமிழ் கற்க ஆர்வமுள்ள வேற்று மொழியினரும் ஏராளமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகளை சங்கத்தின் பொதுச்செயலாளர் சி. ராஜ்குமார், பொருளாளர் நேரு ஆகியோரின் தலைமையில்,நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், வாசன், திரு. சரவணன், ஜெயபிரகாஷ், துரைசாமி, மீனாட்சிசுந்தரம், பாலாஜி, தமிழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குமாரராஜன், ராஜன் முத்துசுவாமி, சரவணகுமார் மற்றும் ஆசிரியர்கள் அருணா தேவி, சசிகலா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியை அருணா தேவி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், வருகை தந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், சுண்டல் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.
- ஹைதிராபாத்திலிருந்து ராஜ்குமார் சிவாஜி
