/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தெலுங்கானா தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
/
தெலுங்கானா தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
ஜன 06, 2026

ஐதராபாத்: தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் 7-ஆவது ஆண்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற “முப்பெரும் விழா” (ஆண்டு விழா, பொங்கல் விழா, தமிழர் கலை விழா) ஐதராபாத் ஹரி ஹர கலா பவனில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
தமிழின் மரபு, மொழி, கலை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த விழா, தெலுங்கானாவில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் நிகழ்வாக அமைந்தது.
இந்தப் பெருவிழாவை தெலுங்கானா தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.கே. போஸ் வழிகாட்டலில், துணைத்தலைவர் தருமசீலன் தலைமையில் பொதுச்செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சங்கத்தை சேர்ந்த அனைவரின் அர்ப்பணிப்பான உழைப்பும் திட்டமிடலும் இவ்விழாவை பெரும் வெற்றியாக மாற்றியது.
விழாவில் ஹரியானா & இமாச்சலப் பிரதேச முன்னாள் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையுரையில், திருக்குறள் குறித்து குறிப்பிடுகையில், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும், சமூக நீதியையும் எடுத்துரைத்த மகத்தான அறிஞர் திருவள்ளுவர். திருக்குறள் இன்றைய தலைமுறைக்கும் வாழ்க்கை வழிகாட்டி நூலாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள், மொழி, பண்பாடு மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமை மற்றும் தலைமுறைத் தொடர்ச்சியையும் உறுதி செய்கின்றன என்றும், இத்தகைய சங்கங்களின் செயல்பாடுகள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பெரும் பங்களிப்பாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், புர்ரா வெங்கடேஷம் (தலைவர் - தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TGPSC), ஆர்.வி. கர்ணன் (ஆணையாளர் - ஐதராபாத் பெருநகர மாநகராட்சி (GHMC)), பி. ராஜதுரை (மூத்த கோட்ட நிதி மேலாளர் - ஐதராபாத் ரயில்வே கோட்டம்), எஸ்.ஏ. மதிவாணன் (கூடுதல் வருமான வரி ஆணையர்), பி.ஏ. யோகசந்தர் ( மத்திய கண்காணிப்பு நில அளவையாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சமூக, கல்வி மற்றும் பண்பாட்டு சேவைகளைப் பாராட்டினர்.
தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் வருகை தந்த பரதநாட்டியம் மற்றும் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் வழங்கிய பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், தப்பாட்டம், மயில்-மாடு ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழ்க் கலையின் ஆழமும் மரபும் மேடையில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது.
மேலும், அனைத்து மொழி சார்ந்த கலாச்சார அமைப்பைச் சேர்ந்த பல மொழி சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு, மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் அவசியத்தை வலியுறுத்தினர்.
எதிர்காலத்தில் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்த இடம் (தமிழ் இல்லம்) அமைத்தல், மாணவர்-இளைஞர் திறன் மேம்பாடு, அறிவியல்-தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை விரிவுபடுத்த சங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விழாவின் முக்கிய அம்சமாக தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் 2026 ஆண்டு நாட்காட்டி மற்றும் “ஆண்டு மலர் - 2025” சிறப்பு விருந்தினர்களால் முறையாக வெளியிடப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, சமூகச் சேவை, இளைய தலைமுறையின் பங்களிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆண்டு மலர், சங்கத்தின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆவணமாக பதிவு செய்துள்ளது.
அதேபோல், தமிழ்ச் சிந்தனையாளர்கள், வரலாற்றுச் சான்றோர்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2026 நாட்காட்டி, தமிழ் மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு வழிகாட்டி ஆவணமாக பாராட்டைப் பெற்றது.
நாட்காட்டி மற்றும் ஆண்டு மலர் வெளியீடு நிகழ்வு, மேடையில் இருந்த விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், தெலுங்கானாவில் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வரும் அறிவுசார் மற்றும் பண்பாட்டு முயற்சிகளின் உயரத்தை வெளிப்படுத்தும் தருணமாக அமைந்தது.
