ADDED : ஆக 13, 2026 11:16 PM

- நமது நிருபர் -
விளையாட்டு துறையில் பெருநகரங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தான் ஜொலிப்பர் என்ற மனநிலையை மாற்றும் வகையில், கிராமப்புறங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர், வீராங்கனையர் மாற்றி வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் பூர்வி ஹரிகந்த்ரா, 14. கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் இருந்து உருவெடுத்துள்ள தடகள இளம்புயல்.
இவர், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகளில், மாநில அளவில் அசாத்திய சாதனைகளை படைத்து, முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். கடந்த ஆண்டு பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடந்த 4வது மினி கர்நாடக விளையாட்டு தொடரில் ஒட்டுமொத்த தடகள பிரிவையும் தன்வசப்படுத்தினார்.
இத்தொடரில் பங்கேற்ற பல வீரர்களை முந்தி சென்று, மொத்தம், 822 புள்ளிகள் பெற்று, கர்நாடகாவின் சிறந்த பெண் தடகள வீராங்கனை என்ற விருதை தட்டி சென்றார்.
தனது, 9வது வயதில் இருந்து தடகள போட்டிகளில் பங்கேற்கும் பூர்வி, மாநில அளவில், 20க்கும் மேற்பட்ட தடகள போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் பதக்கம் வென்றுள்ளார். உத்தர கன்னடா மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் பல முறை சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார் .
பொருளாதார ரீதியாக பூர்வி குடும்பம் ஏழ்மையானது. பயிற்சியாளர் பிரகாஷ் ரேவண்கர், பூர்விக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் வாங்கி கொடுத்து பயிற்சியும் அளிக்கிறார்.
