ADDED : பிப் 22, 2025 05:29 AM

பொதுவாக மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், 'அம்மா சாப்பிடுவதற்கு ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தால் கொடுங்கள்' என்று கேட்பர்.
வீடுகளில் முறுக்கு, மிச்சர், பிஸ்கட் என்ற ஸ்நாக்ஸ் எதுவும் இல்லாவிட்டால் கடையில் சென்று வடை, போண்டா என குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கிக் கொடுப்பர்.
வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்யும் ஸ்நாக்ஸ், குழந்தைகள் உடலுக்கு ஏற்றவையாக இருக்கும். வீட்டிலேயே செவ்வாழை பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
நமது வீடுகளில் அரிசி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என செய்ததை தான் திரும்பத் திரும்ப செய்திருப்போம். ஆனால் செவ்வாழையில் கொழுக்கட்டை செய்வது புதிய அனுபவமாக இருக்கும். அடிக்கடி செய்து சாப்பிடுவதற்கும் தோன்றும்.
இந்த வகை கொழுக்கட்டையை குழந்தைகளும் அதிகம் விரும்பி சாப்பிடுவர். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
மிக்ஸி ஜாரில் செவ்வாழைப் பழம், உப்பு, நாட்டு சர்க்கரை போட்டு பாலை ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் கேழ்வரகு, அரிசி மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து கொள்ளவும்.
தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும். பின், சர்க்கரை சேர்த்து, கலந்து வேக வைத்துள்ள கொழுக்கட்டையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செவ்வாழைப்பழ கொழுக்கட்டை தயார். -- நமது நிருபர் - -