ADDED : ஏப் 04, 2026 04:42 AM

- நமது நிருபர் -
வெயில் காலங்களில் அதிகமாக நீராகாரம் எடுத்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இதுபோன்ற சமயங்களில், பலரும் கடையில் பாட்டில்களில் விற்கப்படும், 'கூல் டிரிங்க்ஸ்'களையே குடிக்கின்றனர். இது, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். எனவே, வீட்டிலே செய்யப்படும் பழச்சாறுகளை குடிக்கலாம். பழச்சாறுகளுக்கு பதிலாக பானகம் செய்தும் குடிக்கலாம். இதை எப்படி செய்வது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வெல்லம் 1/2 கப்
எலுமிச்சை பழம் 1
சுக்கு பொடி 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி 1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெல்லத்தை பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போடவும். இதில், 1 கிளாஸ் தண்ணீரை ஊற்றவும். வெல்லத்தை நன்கு கரைக்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும், அதை ஒரு வடிகட்டியால் வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய வெல்ல நீரில் சுக்கு பொடி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதில், எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாற்றின் சுவை பானத்தில் ஏற்றளவிற்கு தண்ணீரை கலக்க வேண்டும். பின், இதில் ஐஸ் கட்டிகளை போட வேண்டும். அவ்வளவு தான், பானகம் தயார்.
இதை மதிய வெயில் நேரத்தில் வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு குடிப்பதற்கு சுகமாக இருக்கும்.

