ADDED : மார் 29, 2025 02:48 AM

கர்நாடகாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தொண்டைக்கு இதமாக மக்கள் குளிர்பானங்கள் பருகுகின்றனர். இதனால் இளநீர், ஜூஸ், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை படுஜோராக நடக்கிறது.
வெள்ளரிக்காயை வெறுமனே சாப்பிட்டு தான் இருப்போம். வெள்ளரிக்காயில் சில மருத்துவ குணங்களும் உள்ளன. கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண் மீது வைத்தால் சரியாகும்.இப்படிப்பட்ட வெள்ளரிக்காயில் சாதமும்செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இரண்டு வெள்ளரிக்காய்
அரை டீஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு
ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு
தேவையான அளவு வடித்த சாதம்
இரண்டு காய்ந்த மிளகாய்
கால் டீஸ்பூன் மிளகு பவுடர்
ஒரு கொத்து கறிவேப்பிலை
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
வேர்க்கடலை தேவையான அளவு
கால் டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
செய்முறை:
முதலில் வெள்ளரிக்காயை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பிறகு, துருவி வைத்து இருக்கும் வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் பவுடர், மிளகு துாள் சேர்த்து நன்றாக வதக்கி, தண்ணீர் வற்றி வந்ததும் சாதம் போட்டு கிளறி இறக்கினால் சுவையான, வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் சாதம் தயார்.
- நமது நிருபர் -