ADDED : ஏப் 18, 2026 05:54 AM

- நமது நிருபர் -
தினமும் காலை சிற்றுண்டி, சுவையானதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். தினமும் ஒரே விதமான சிற்றுண்டி சாப்பிட்டு போரடிக்கிறதா. புதினா பனீர் புலாவ் தயார் செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்
* அரிசி - 2 கப்
* பனீர் - 200 கிராம்
* புதினா இலைகள் - ஒரு கப்
* வெங்காயம் - 2
* பச்சை பட்டாணி - சிறிதளவு
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
* லவங்கம் - 4
* பட்டை - சிறு துண்டு
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் புதினா இலைகளுடன், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, மிக்சியில் மென்மையாக அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து வறுக்கவும்.
அதன்பின் இதில் நறுக்கிய வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். பின், பனீர் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி, பச்சை பட்டாணி, பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடம் வதக்கவும். இந்த கலவையில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள புதினா, இஞ்சி, பூண்டை சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை கலக்கவும்.
நன்றாக கழுவிய அரிசியை, இந்த மசாலாவில் சேர்த்து கிண்டவும். உப்பு, நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்தால், கமகமக்கும் புதினா பனீர் புலாவ் தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறலாம். இதை தயாரிக்க அதிக நேரம் தேவைப்படாது.

