ADDED : மே 23, 2026 03:57 AM

- நமது நிருபர் -
மாலை நேரம் காபி அல்லது டீயுடன், சூடான சமோசா சாப்பிட, கேழ்வரகு சமோசா செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)
கம்பு மாவு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
உலர்ந்த திராட்சை - 2 ஸ்பூன்
பச்சை பட்டாணி - அரை கப்
புளிச்சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - சுவைக்கு தேவையான அளவு
மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சைகளை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் சீரகம், சோம்பு, சிறிதாக நறுக்கிய பச்சை காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் மஞ்சள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவையில் புளிச்சாறு, முந்திரிப்பருப்பு, திராட்சையை போட்டு கிளறவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு, சிறிதளவு சீரகம், சோம்பு, உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக்கவும். இவற்றை சப்பாத்திகளாக தட்டவும். இதை சமோசா வடிவமாக்கி, அதற்குள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து நிரப்பி மூடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் சமோசாக்களை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சுவையான ராகி சமோசா தயார்.
தக்காளி சாஸ் அல்லது கிரீன் சட்னி தொட்டு சாப்பிட்டால், சுவை அதிகமாக இருக்கும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். கம்பும், கேழ்வரகும் சேர்ப்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்!
