ADDED : மார் 28, 2026 04:15 AM

- நமது நிருபர் -:
கேரளாவில் மிகவும் பிரபலமான பெட்டி பத்திரியை, நம் வீட்டில் மிகவும் சுலபமான முறையில், அருமையான ருசியில் அனைவரும் விரும்பும்படி அட்டகாசமாக செய்து கொடுப்போம். மதியம் வீட்டில் செய்த சிக்கன் குழம்பை வைத்து, ஒரு வித்தியாசமான சூப்பரான மாலை நேர சிற்றுண்டியாக மாற்றிவிடலாம்.
தேவையான பொருட்கள்
வீட்டில் செய்த சிக்கன் குழம்பு
கோதுமை மாவு - கால் கிலோ
எண்ணெய் - பொறிப்பதற்கு
சின்ன வெங்காயம் - 10 கிராம்
மிளகுத் துாள் - கால் டீஸ்பூன்
சீரகத்துாள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை சப்பாத்திக்கு செய்வது போன்று பிசைந்து தயார் செய்து கொள்ளவும். சிக்கன் குழம்பை தயாராக எடுத்து வைக்கவும்.
சிறிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும். சிக்கன் குழம்பில் இருக்கும் துண்டுகளில், எலும்பு இல்லாத சிக்கனை எடுத்து உதிர்த்து வைக்கவும்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகுத்துாள், சீரகத்துாள், உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும், அதில் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கி விட்டு, இரண்டு கரண்டி சிக்கன் குழம்பை அதில் சேர்க்கவும்.
குழம்பு, வெங்காயம், சிக்கன் என அனைத்தும் சேர்ந்து உதிரியாக ஆகும் வரை நன்றாக கிளறி விடவும்.
இந்த கலவை கொஞ்சம் ஆறிய பின், வட்டமாக தேய்த்து வைத்த கோதுமை மாவின் நடுவில் ஒரு கரண்டி எடுத்து வைக்கவும். இரண்டு பக்கமும் ஓரங்கள் பிரிந்து விடாமல் நன்கு ஒட்டி வைத்து, ஒரு முள் கரண்டியால் அழுத்தி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஒன்றொன்றாக போட்டு பிரிந்து விடாமல் இருபுறமும் பொன்னிறமாகும்படி பொரித்தெடுக்கவும்.
மிகமிக அருமையான கேரளா ஸ்டைல் பெட்டி பத்திரி தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

