ADDED : மார் 21, 2026 05:36 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குளுகுளு நிலைக்கு பெயர் பெற்ற தலைநகர் பெங்களூரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
வெயிலால் தொண்டை வறட்சி அடையும் போது, ஜில்லென குடிப்பதற்கு இளநீர், சர்பத்தை தேடி பலரும் செல்வது வழக்கமானது. வெயில் காலத்தில் குழந்தைகள் அதிகம் கேட்பது ஐஸ்கீரிம் தான். கடைகளுக்கு சென்று ஐஸ்கீரிம்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே மட்கா குல்பி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
l கால் கப் கற்கண்டு
l ஒரு கப் பிரஷ் கிரீம்
l அரை கப் பால்
l அரை டீஸ்பூன் குங்குமப்பூ
l கால் கப் தயிர்
l கால் கப் பால் பவுடர்
l 20 பாதாம்
l 15 முந்திரி
l 5 ஏலக்காய்
l அரை டீஸ்பூன் சோம்பு
l ஒரு டீஸ்பூன் கசகசா
l ரோஜா இதழ்கள் சிறிதளவு
செய்முறை
பாதாம், முந்திரி, ஏலக்காய், சோம்பு, கசகசா, ரோஜா இதழ்களை மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஊற வைக்கவும். பின், மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து, பாலை ஊற்றி சுண்ட காய்ச்சியதும், அதில் குங்குமப்பூவை சேர்ந்து கலந்து கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் பிரஷ் கிரீம், தயிர், கல்கண்டு, பால் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு பவுலில் காய்ச்சிய பால், அரைத்த விழுது, தயிர் கலவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், ரோஜா இதழ் சேர்த்து பிரிட்ஜில் வைத்து, குளுகுளுப்பாக மாறியதும் எடுத்து பருகலாம்.
