ADDED : ஆக 02, 2025 02:02 AM

இன்றைய தலைமுறையினர் ருசிக்க தவிர்க்கும் உணவுகளில் ஒன்று 'மோர் களி'. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மோர் களியும் ஒன்று. உப்புமா போன்று இருந்தாலும், மோர் களிக்கு மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு பயன்படுத்தி மோர் களி செய்யலாம்.
செய்முறை ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அரிசி மாவு, 200 மில்லி தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி, நன்றாக கலக்கவும்.
பெரிய கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் பத்து மோர் மிளகாய் பாதியாக உடைத்து போட்டு வறுக்கவும்.
இத்துடன், ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பெருங்காயம் போட்டு வறு.
இதன் பின், அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி கிண்டவும். மிதமான சூட்டில் 5 - 6 நிமிடங்கள் கிண்ட வேண்டும்.
ஆரம்பத்தில் சொன்னது போல், இது உப்புமா செய்முறை போல தான். தண்ணீர் வற்றி, மோர் களி தயாராகும்.
களி ஓரளவு கெட்டியானதும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிண்ட வேண்டும்.
மோர் களி கெட்டியான பிறகு, அடுப்பை ஆப் செய்து, ஒரு சதுர வடிவிலான பாத்திரத்தில் மாற்றி, அரை மணி நேரம் ஆறவிடவும்.
சிலர் அப்படியே கூட சாப்பிட விரும்புவர். அவர்கள் ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம் அல்லது இரண்டாவது செய்முறையை தொடரலாம்.
ஆறவிட்ட மோர் களி கேக் போன்று மாறிவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
வாணலியில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி, அது சூடானதும் பனீர் ரோஸ்ட் செய்வது போன்று, மோர் களி துண்டுகள் போட்டு வறுத்து எடுத்தால் ரெடியாகிவிடும்
- நமது நிருபர் - .