ADDED : ஏப் 25, 2025 09:09 PM

கசகசா போளி
==========
தேவையான பொருட்கள்:
* கசகசா - 1 கப்
* கொப்பரை துருவல் - 1 கப்
* வெல்லம் - முக்கால் கப்
* ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
* ரவை - அரை கப்
* கோதுமை மாவு - அரை கப்
* உப்பு - கால் ஸ்பூன்
* மஞ்சள் துாள்- 1 சிட்டிகை
* எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
கசகசா, கொப்பரை தேங்காய் இரண்டையும் மாவாக பொடிக்கவும். இவற்றை அடி கனமான பாத்திரத்தில் போடுங்கள். இதில் வெல்லம், ஏலக்காய் துாள், சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கலவை கெட்டியான பின் இறக்கினால், பூர்ணம் தயார்.
ரவை, கோதுமை மாவில் உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதன் மீது மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊறி, இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போன்று தட்டி, அதில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பூர்ணத்தை வைத்து மூடி, போளி தயாரிக்கும் காகிதத்தில் வைத்து கையால் மெல்லியதாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடான பின், மிதமான தீயில் வைத்து, போளியை போட்டு இரண்டு பக்கமும் பொன் நிறமாக வேக வைத்தால், கசகசா போளி தயார்.
============
பாசிப்பருப்பு போளி
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு- 1 கப்
* சர்க்கரை - 2 கப்
* ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
* நெய் - 2 ஸ்பூன்
* பால் - 2 ஸ்பூன்
* ரவை- அரை கப்
* கோதுமை மாவு - அரை கப்
* உப்பு- ஒரு சிட்டிகை
* மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
* எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
பாசிப்பருப்பை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, மாவாக பொடித்து கொள்ளவும். சர்க்கரையை பொடித்து கொண்டு, இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் நெய், பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து பூர்ணம் தயாரிக்கவும்.
ரவை, கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் துாள், சிறிதளவு நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். அதன் மீது மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, அதற்குள் பூர்ணத்தை வைத்து மூடி, போளி தயாரிக்கும் காகிதத்தில் வைத்து கையால் மெல்லியதாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடான பின், மிதமான தீயில் , போளியை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான பாசிப்பருப்பு போளி தயார்.
==========
பன்னீர் போளி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* பிளைன் கோவா - கால் கப்
* பொடித்த சர்க்கரை - கால் கப்
* ஏலக்காய் துாள் - கால் ஸ்பூன்
* ரவை - அரை கப்
* கோதுமை மாவு - அரை கப்
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
* எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கோவா, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் துாள் போட்டு நன்றாக கிளறி, பூர்ணம் தயாரிக்கவும். ரவை, கோதுமை மாவில், உப்பு, மஞ்சள் துாள் போட்டு, சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து, எண்ணெய் தடவி, இரண்டு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
அதன்பின் மாவை சிறு உருண்டைகளாக்க உருட்ட வேண்டும். பின்னர் பூர்ணத்தை அதில் வைத்து மூடி, காகிதத்தில் வைத்து கையால் மெல்லியதாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடான பின், மிதமான தீயில், போளியை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான பன்னீர் போளி தயார்.
- நமது நிருபர் -

