ADDED : மே 09, 2026 02:13 AM

- நமது நிருபர் -
பூசணிக்காயை பயன்படுத்தி, சுவையான பர்பி செய்யலாம். இதை, வட மாநிலங்களில், 'லவுகி கி பர்பி' என அழைப்பர். அதை எப்படி செய்வது என, பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்: 1 கிலோ
நெய்: 150 கிராம்
பால்: அரை லிட்டர்
சர்க்கரை: ஒரு கப்
இனிப்பு இல்லாத கோவா: 200 கிராம்
ஏலக்காய் துாள்: 1 ஸ்பூன்
பாதாம், முந்திரி: கால் கப்
புட் கலர்: 1 சிட்டிகை
செய்முறை
முதலில், பூசணிக்காயை தோல் நீக்கி, உட்புற விதைகளை அகற்றவும். கெட்டியான வெளிப்பகுதி காயை மெல்லியதாக துருவி கொள்ளவும். துருவிய பின், கூடுதல் நீரை கையால் பிழிந்து எடுக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து, அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை வைக்கவும். அதில், 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். காய்ந்ததும் துருவிய பூசணிக்காயை சேர்த்து, 5 - 7 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும். பூசணிக்காய் மிருதுவான பின், அதில் பால் சேர்க்கவும். பால் சுண்டி, பூசணிக்காய் நன்றாக வேகும் வரை, கை விடாமல் கிளறவும்.
பாலும், காயும் சேர்ந்து கெட்டியான பின், சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் கோவாவை சேர்த்து, நன்றாக கிளறவும். கலவை பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும் போது, ஏலக்காய் பொடி, மீதமுள்ள நெய், நெய்யில் வறுத்து பொடித்த பாதாம், முந்திரி பருப்பு மற்றும் புட் கலர் சேர்த்து கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, பர்பியை கொட்டி பரப்பவும். அதன் மீது உலர்ந்த பழங்களை துாவி அலங்கரிக்கவும். 2 - 3 மணி நேரம், அப்படியே வைத்திருக்கவும். அதன் பின், விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான பூசணிக்காய் பர்பி ரெடி. குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
பூசணிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்றது. சிலருக்கு பூசணிக்காய் பிடிக்காது. இது போன்று பர்பி செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். பர்பி, இனிப்பாக இருக்க வேண்டும் என, விரும்பினால் கூடுதல் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்!

