ADDED : செப் 12, 2026 04:27 AM

- நமது நிருபர் -
அரிசி சாதம் மீதமாகி விட்டதா... இந்த சாதத்தை பயன்படுத்தி சுவையான பூண்டு சாதம் செய்யலாம். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா...
தேவையான பொருட்கள் சாதம் - 2 கப்
எண்ணெய் அல்லது நெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
பூண்டு - 12 முதல் 15 பற்கள்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
செய்முறை முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். காய்ந்ததும், கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு போட்டு, பொன்னிறமாக வறுக்கவும்.
இதில் கறிவேப்பிலை, உலர்ந்த மிளகாய், பச்சை மிளகாய் போடவும். அதன்பின் பூண்டு பற்களை போட்டு வதக்கவும்.
இதில் மஞ்சள் துாள், சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
மூன்று நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும். அதன்பின் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி போட்டு கிளறினால், காரசார பூண்டு சாதம் தயார். பழைய சாதம் மட்டுமின்றி, புதிதாக வடித்த சாதத்திலும் பூண்டு சாதம் செய்யலாம்.
அனைவரும் விரும்பி சாப்பிடுவர். பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு, பள்ளிக்கு மதிய உணவாகவும் கொடுத்தனுப்பலாம். தொட்டுக்கொள்ள சிப்ஸ் பொருத்தமாக இருக்கும்!
